எனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் அன்போடு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுகவின் முப்பெரும் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரின் உடல் நலம் குறித்து அரசியல் தலைவர்கள் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 16) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திமுக பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று, திமுக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
