சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்து கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுகவையும், அதன் தலைவர்களையும் களங்கப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்படுவதாக திமுக சட்ட பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை பல்வேறு இணைய பக்கங்கள் மூலம் வெளியிட்டு திமுகவினருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். வாய்ஸ் ஆப் காமன், ரூட் போன்ற அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு காவல் ஆணையர் அலுவலகத்தில் 17 புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது மட்டும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திமுகவினர் அளிக்கும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யாததால், இந்த புகார்களை சிபிஐக்கு அனுப்பி நியாயமான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
மீண்டும் இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 15) நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “விளம்பரத்துக்காக இதுபோல பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகளை நீக்குவது தொடர்பாக விரிவான நடைமுறை வகுக்கப்பட்டு வருவதால் இரண்டு வார கால அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதேசமயம் சமூகவலை தளங்களில் அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினருக்கும் எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
