அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை கேபி முனுசாமி தலைமையிலான அதிமுக குழு நேரில் சந்தித்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டது.
தேர்தல் வழக்குகள் இல்லாத தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக தாராபுரம் தொகுதியில் பானுமதி, மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் இரு வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அதிமுக தலைவர்கள் குழு, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் அதிமுக குழு ஆதரவு கோரி இருந்தது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தலைமையிலான குழு இன்று செப்டம்பர் 15-ந் தேதி நேரில் சந்தித்து ஆதரவு கோரியது. இந்த குழுவில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.. ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இதேபோல புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியையும் அதிமுக குழு நேரில் சந்தித்து ஆதரவு கேட்டது.



இதனிடையே புதிய உழைப்பாளர் கட்சியின் நிறுவனத் தலைவர் காந்தி, நாம் இந்தியர் கட்சியின் வடக்கு மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் நா. சௌந்தரராஜன், மக்கள் முரசு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்து 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தனர்.
