கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், ”கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர்.
குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேடு, ஈவிஎம் இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது பெல் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பொறியாளரும் இருந்தார். 100 சதவீத வி.வி பேட் மற்றும் வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
இதில் 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடு, ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் இயந்திரம் குறித்து புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ”இதுபோன்று பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது.
குறிப்பாக பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல்
நடைபெற்றது என கூறினார்.
எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை சரி பார்க்க வேண்டும்.
மேலும் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
