மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டலாம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் எழுதி உள்ள கடிதத்தில்
“காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கு முன்னதாக, ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் கட்டாயம் பெற வேண்டும் என 2018 பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்கும்வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்ட விதிகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமலேயே, ‘ஜல் சக்தி’ துறை இணையமைச்சரின் இந்த பதில் ஏமாற்றமளிக்கிறது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் தற்போதைய சூழலில் இந்திய அரசு, “மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்களில் நிலைநாட்டப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்டக் கோட்பாடுகளைக் குறிப்பிடாமல், 27 ஜூலை 2026 அன்று மாநிலங்களவையில் நட்சத்திரமிடப்படாத கேள்வி எண் 876-க்கு மாண்புமிகு ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும்.

மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றிலும் உடன்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படும் வரை, அத்திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கப்படக்கூடாது.

ADVERTISEMENT

நீர் அளவு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நீர் திறப்பு முறை ஆகிய இரண்டிலும் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான எந்தவொரு எதிர்காலப் பரிசீலனையும், அனைத்து கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, விரிவான தொழில்நுட்ப மற்றும் சட்டப் பரிசீலனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.

ADVERTISEMENT

காவிரி ஆறு வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் வாழ்வாதாரமாகும். மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சார்ந்த நடைமுறைகள் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் மாண்பைக் காப்பது அவசியமாகும்.

நீதியின் நலன், கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறை முடிவுகளைச் சரிவர செயல்படுத்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தாங்கள் இதில் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share