கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி கரூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், பணியாணைகளை வழங்கினார்.
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்த செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 31 பேரின் தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் கேட்கவில்லை. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கிடையே கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆனந்த் ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அன்றைய தினமே அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
