தற்காலிக சபாநாயகராக கருப்பையா எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒரு நபர் ஒரு தொகுதி என்ற விதியின்படி அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 107 ஆகக் குறைந்தது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும், அமைச்சரவையில் இடம்பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த ஆதரவின் மூலம் விஜயின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டிய நிலையில், விஜய் தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.
அவரது அமைச்சரவையில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விஜய் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார். தற்காலிக சபாநாயகராக, மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைப்பார். இவர் கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த கருப்பையா, இம்முறை அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
