மாணவி ஸ்ரீமதி மரணத்தால் மூடப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி இறந்தார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
பள்ளிக்கு சொந்தமான 21 பேருந்துகள், 1 ஜேசிபி, 2 டிராக்டர்கள், 2 டிப்பர் லாரிகள் எரிக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே கலவரத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை செய்தனர்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சேத விவரங்களை சரிபார்க்க சம்மந்தப்பட்ட பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று(ஆகஸ்ட் 30) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலவரத்தால் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதங்கள், தீ வைத்து கொளுத்தியதில் சேதமடைந்த வாகனங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
கலை.ரா
