ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, தட்கல் (Tatkal) டிக்கெட் கிடைப்பது என்பது எப்போதுமே ஒரு பெரிய சவால்தான். பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். காலை 10 மணிக்கு ஏசி வகுப்பிற்கும், 11 மணிக்கு ஸ்லீப்பர் வகுப்பிற்கும் புக்கிங் தொடங்கும். நாம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் முன் கண் இமைக்காமல் காத்திருப்போம். ஆனால், நாம் லாகின் செய்து, பயணிகளின் பெயரையும் வயதையும் டைப் செய்வதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் “All Tickets Sold Out” என்று போர்டு வந்துவிடும்.
“எப்படிடா இவ்ளோ சீக்கிரம் டிக்கெட் காலி ஆச்சு?” என்று நாம் புலம்புவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர் 1 முதல்) தட்கல் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு ஒரு வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆம், ஐஆர்சிடிசி (IRCTC) தனது புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.
டிசம்பர் 1 முதல் அமலான மாற்றம்: டிக்கெட் புக்கிங் மோசடிகளைத் தடுக்க, டிசம்பர் 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் OTP (One Time Password) முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை விவரங்களை வேகமாக டைப் செய்துவிட்டுப் பணம் கட்டச் சென்றுவிடலாம். ஆனால் இப்போது, நீங்கள் பணம் செலுத்தும் நிலைக்கு (Payment Gateway) செல்லும் முன்போ அல்லது பயணிகளின் விவரங்களைப் பதிவு செய்யும்போதோ, உங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த 4 அல்லது 6 இலக்க எண்ணைச் சரியாகப் பதிவிட்டால் மட்டுமே உங்கள் புக்கிங் அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.
ஏன் இந்த திடீர் மாற்றம்? இதுவரை ஒரு சில புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சட்டவிரோத ‘ஆட்டோமேஷன் சாஃப்ட்வேர்கள்’ (Illegal Automation Scripts) மூலம், நொடிப்பொழுதில் டிக்கெட்டுகளை மொத்தமாக அள்ளிவந்தனர். மனிதர்களாகிய நாம் டைப் செய்ய எடுக்கும் நேரத்தை விட, இந்த மெஷின்கள் பல மடங்கு வேகம்.
இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த OTP முறை. மெஷின்களால் தானாகவே பெயரை நிரப்ப முடியுமே தவிர, உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐத் திருடி டைப் செய்ய முடியாது. மனிதர்கள் மட்டுமே OTP பார்த்து டைப் செய்ய முடியும் என்பதால், டிக்கெட் முறைகேடுகள் பெருமளவு குறையும்.
பயணிகள் கவனிக்க வேண்டியவை:
- மொபைல் எண்: உங்கள் IRCTC கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் (Mobile Number) தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
- நெட்வொர்க்: தட்கல் நேரத்தில் மொபைல் நெட்வொர்க் சரியாகக் கிடைக்கும் இடத்தில் இருப்பது அவசியம். OTP வரத் தாமதமானால், டிக்கெட் மிஸ் ஆக வாய்ப்பு அதிகம்.
இந்தக் கெடுபிடிகள் டிக்கெட் புக் செய்யச் சிறிது நேரம் எடுப்பது போலத் தோன்றினாலும், நேர்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க இது வழிவகுக்கும் என்பதே ரயில்வே நிர்வாகத்தின் நம்பிக்கை. இனி தட்கலில் டிக்கெட் போடும்போது போனை மறக்காம கைல வச்சுக்கோங்க பாஸ்!
