கனடாவின் டொரொண்டோ நகரில், இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாலை, யூனிவர்சிட்டி ஆஃப் டொரொண்டோ ஸ்கார்பரோ கேம்பஸ் அருகே உள்ள ஹைலேண்ட் க்ரீக் ட்ரெயில் – ஓல்ட் கிங்ஸ்டன் ரோடு பகுதியில், இந்திய முதுநிலை மாணவரான ஷிவாங்க் அவஸ்தி (20) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம், டொரொண்டோவில் இந்த ஆண்டில் பதிவான 41வது கொலையாகும். இதனால், கனடாவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து டொரொண்டோவில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
“யூனிவர்சிட்டி ஆஃப் டொரொண்டோ ஸ்கார்பரோ கேம்பஸ் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில், இளம் இந்திய முதுநிலை மாணவர் ஷிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்து, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் டொரொண்டோவிலேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்இந்திய மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
