அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியக் காப்பீட்டுத் துறை (Insurance Sector) மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. அந்த அறிக்கையின்படி வரும் 10 ஆண்டுகள் காப்பீட்டு உலகின் ஆண்டுகளாக அமையும் என்றும், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் காப்பீட்டுச் சந்தை ஆண்டுக்கு 10.7 சதவீதம் என்ற விகிதத்தில் வளரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (10.1 சதவீதம்) விட அதிகமாகும்.
அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் தற்போதுள்ள குறைபாடுகளே இதற்கான முக்கியக் காரணங்களாகும். மக்கள்தொகை மாற்றங்கள், அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் தற்போதுள்ள குறைபாடுகளே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக இருக்கும் என்று அலையன்ஸ் நிறுவனத்தின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவான அலையன்ஸ் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், IRDAI-யின் “2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு” போன்ற ஒழுங்குமுறை முயற்சிகளும் சமீபத்திய சந்தை சீர்திருத்தங்களும் இத்துறையின் வளர்ச்சி, செயல்திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையின்படி, உலகின் பத்து மிகப்பெரிய காப்பீட்டுச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும், காப்பீட்டுப் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீட்டு ஊடுருவல் வெறும் 3.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. வேலை செய்யும் வயதுடைய மக்களில் 46 சதவீதம் பேர் மட்டுமே ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் உள்ளனர். பெரும்பாலான சுகாதாரச் செலவுகள் சொந்தப் பணத்தில் செய்யப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியக் காப்பீட்டுச் சந்தை 2025ஆம் ஆண்டில் 9.4 சதவீதம் வலுவான வளர்ச்சியை அடையும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
மொத்த பிரீமியம் வருமானம் 2024ஆம் ஆண்டில் 133 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அது 146 பில்லியன் டாலரை எட்டும். மொத்த பிரீமியம் வருமானத்தில் 74 சதவீதத்தைக் கொண்டுள்ள ஆயுள் காப்பீட்டுத் துறை 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதே நேரத்தில் சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுத் துறை 7.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சுகாதாரக் காப்பீட்டுத் துறை மிக வேகமாக வளரும் பிரிவாகத் தொடர்கிறது. அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்பில் தொடர்ச்சியான குறைபாடுகள் இருந்தபோதிலும், இத்துறையில் பிரீமியங்கள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளன.
