இந்திய கார் சந்தையில் விரைவில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படவிருக்கிறது. ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வரவுள்ள இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) கீழ், இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல கார்களுக்கான இறக்குமதி வரிகள் கணிசமாகக் குறைக்கப்படவுள்ளன. இதனால் வரும் ஆண்டுகளில் இந்திய வாடிக்கையாளர்கள் பல வெளிநாட்டு கார்களைக் (British cars) குறைந்த விலையில் வாங்க வாய்ப்புள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் 3.78 லட்சம் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இறக்குமதி வரி 10% ஆகக் குறைப்பு:
இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறிப்பிட்ட வகையிலான கார்களுக்கான இறக்குமதி வரி படிப்படியாகக் குறைக்கப்படும். தற்போது பல வெளிநாட்டு கார்களுக்கு 110 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் இது 10 சதவீதமாகக் குறைக்கப்படும். இருப்பினும், இந்த வரிச் சலுகை ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டிற்குள் (quota) வரும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். முதல் ஆண்டில் சுமார் 20,000 கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும். ஐந்தாவது ஆண்டில் ஒதுக்கீடு 37,000 கார்கள் வரை உயரும்.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்மை:
குறைந்த இறக்குமதி வரிகள் கார் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பிரிட்டனிலிருந்து வரும் பல பிரீமியம் மற்றும் சொகுசு கார்கள் இந்தியாவில் முன்பை விடக் குறைந்த விலையில் கிடைக்கலாம். குறிப்பாக, அதிக திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கார்களை வாங்குபவர்கள் இதனால் பயனடைய வாய்ப்புள்ளது. இது இந்திய சந்தையில் போட்டியை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு அதிகத் தேர்வுகளை வழங்கும்.
இந்திய நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்பு:
இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது. ஆறாவது ஆண்டிலிருந்து, மின்சார (electric), ஹைப்ரிட் (hybrid) மற்றும் ஹைட்ரஜன் கார்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு வரி இல்லாத அனுமதி கிடைக்கும். டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்கள் இதனால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15வது ஆண்டிற்குள் இந்திய நிறுவனங்களால் ஆண்டுக்கு 88,000 மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் வரை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
