இந்திய விமானப்படை தினத்திற்கான இறுதிக்கட்ட ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையோரம் இன்று(அக்டோபர் 4) நடைபெற்றது.
இந்திய விமானப்படை 1932 அக்டோபர் 8 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1950-ஆம் வருடம் தான் ‘இந்திய விமானப் படை’ என்று பெயர் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி விமானப் படை தினத்தைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சிகளும், இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பும் நடைபெறும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், விமானப் படை தினத்தை டெல்லியில் அல்லாமல் மற்ற ஊர்களில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 92வது இந்திய விமானப் படையின் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 1 வரை சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்குபெறும்.
இதற்கான ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையோரம் கடந்த சில தினங்களாக நடந்த நிலையில், இறுதிக்கட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது.
எப்படிப் பார்ப்பது? டிக்கெட் எடுக்க வேண்டுமா?
அக்டோபர் 6 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்குக் கட்டணம் ஏதும் இல்லை. லைட் ஹவுஸ் முதல் அண்ணா சிலை வரை உள்ள பகுதிகளிலிருந்து இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.
நேரில் பார்க்க இயலாதவர்கள் தூர்தர்ஷன் நேஷ்னல் மற்றும் தூர்தர்ஷன் தமிழ் யூடியூப் சேனலில் இந்த விமான சாகச நிகழ்ச்சியைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அமிதாப்புக்கு இவ்வளவு தானா?
13 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!