“கைநிறையச் சம்பளம் வாங்குற ஐடி வேலை வேண்டாம்… சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும்!” – இதுதான் இன்றைய இளைஞர்கள் பலரின் ‘மைண்ட் வாய்ஸ்’. ஆனால், “ஐடியா இருக்கு, ஆனா அதை எப்படிப் பணமா மாத்துறதுனு தெரியலையே?” என்று குழம்பும் தொழில்முனைவோர்களுக்கு ஒரு தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறது சென்னை ஐஐடி (IIT Madras).
சென்னை ஐஐடி-யின் கோபாலகிருஷ்ணன்-தேஷ்பாண்டே மையம் (GDC), தனது 6ஆவது ஆண்டு விழாவைச் சமீபத்தில் நடத்தியது. இதில் பேசப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் பிசினஸ் உலகில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ‘தாரக மந்திரம்’.
என்ன நடந்தது? இந்த ஆண்டு விழாவின் முக்கியக் கருப்பொருளே “புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஜனநாயகப்படுத்துதல்” (Democratising Innovation and Entrepreneurship) என்பதுதான். அதாவது, பிசினஸ் செய்வது என்பது ஏதோ பெரிய பணக்காரர்களுக்கோ அல்லது மெட்ரோ சிட்டியில் இருப்பவர்களுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல; அது சாமானிய மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சொன்னது என்ன? நிகழ்ச்சியில் பேசிய இன்போசிஸ் இணை நிறுவனரும், ஜிடிசி-யின் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், “ஆராய்ச்சி கூடங்களில் (Labs) உருவாகும் கண்டுபிடிப்புகள் அங்கேயே முடங்கிவிடக் கூடாது. அவை மக்களுக்கான பயனுள்ள பொருட்களாகச் சந்தைக்கு (Market) வர வேண்டும். டீப் டெக் (Deep Tech) ஸ்டார்ட்அப்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்” என்று ஆணித்தரமாகச் சொன்னார்.
ஐஐடி டைரக்டர் அட்வைஸ்: சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி பேசும்போது, “எங்கள் நோக்கம் வெறும் படிப்பு மட்டுமல்ல. மாணவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்கள் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும். கிராமப்புறங்களில் இருந்தும் சிறந்த தொழில்முனைவோர்களை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
ஐஐடி-னா ஏதோ படிப்ஸ் பசங்க மட்டும் போற இடம்னு நினைக்காதீங்க. உங்ககிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருந்து, அது சமூகத்துக்குப் பயன்படும்னா, ஐஐடி-யின் இன்குபேஷன் சென்டரை (Incubation Centre) நீங்களும் அணுகலாம். அவங்க உங்களுக்கு இடமும் கொடுத்து, ஃபண்டிங் (Funding) வாங்கவும் வழி காட்டுவாங்க. சும்மா கனவு மட்டும் காணாம, களத்துல இறங்குங்க பாஸ்!
