குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவுக்கும்(35), காட்டாண்டிகுப்பத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும்(42) 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் பண்ருட்டி நகரப்பகுதியில் இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு சொந்த வீடு உள்ளது. காம்ப்ளக்ஸ்,பிளாட்கள், கட்டிடங்கள் கடைகளால் வாடகை வருமானமும் வந்தது. இதனால் பொருளாதாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த தம்பதியினருக்கு குமரகுரு என்ற 12 வயது மகனும், 8 வயதில் தாரணி ஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.
இந்தநிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன் கணவருக்கும் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையில், சுகன்யா ஆசிட் குடித்திருக்கிறார். அதில் பவர் குறைவாக இருந்ததால் சுகன்யாவுக்கு எதுவும் ஆகவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு மேல்மாம்பட்டுவில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவரது கணவர், சுகன்யாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். குழந்தைகளும், “வீட்டுக்கு வாம்மா” என்று அழைத்துள்ளனர். ஆனால் சுகன்யா வரவில்லை.
இதனால் அதிருப்தியிலும் மன உளைச்சலிலும் இருந்த ராஜா, இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ராஜா இறப்பதற்கு முன்னதாக ஆடியோ பதிவு செய்து வைத்தது தெரியவந்துள்ளது.
அந்த ஆடியோவில் குடும்பத்தில் உள்ள சிலரது பெயரையும், மனைவி சுகன்யா பெயரையும் குறிப்பிடும் ராஜா, “நான் படிச்ச முட்டாள்.பைத்தியகாரதனமான முடிவை எடுக்கிறேன். நான் யாருக்கும் கஷ்ட்டத்தையும் பாரத்தையும் கொடுக்க விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்” என்று விம்மிய குரலில் பேசுகிறார்.
அவரை தொடர்ந்து பேசும் ராஜாவின் 12 வயது மகன் , “நீங்கள் எங்கள் எல்லோரையும் மன்னித்துவிடுங்கள் நான் எங்க அப்பா கூட சாமிகிட்ட போறேன்” என்று சொல்ல,
7 வயது மகள்” நீங்களும் என்ன மன்னிச்சுகோங்க… நான் எங்க அப்பா கூட சாமிகிட்ட போறேன்” என்று மழலை குரலில் சாகப்போகிறோம் என்று கூட தெரியாமல் பேசியிருப்பது கேட்போரின் நெஞ்சை உலுக்குகிறது.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைக்காக இப்படியா செய்து கொல்வது என ராஜாவின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
