உடலுக்கு ஊட்டமளிப்பதோடு பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய ராகி தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தினமும் அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை என ஒரே மாதிரியாக உணவை சாப்பிட்டு நமக்கே சலிப்பு தட்டிவிடும். அதற்கு பதிலாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு மேலும் பலம் சேர்க்கும். உடல் பருமன் போன்ற பிரச்னைகளிலும் இருந்தும் விடுபடலாம். குறிப்பாக ராகியை உணவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
குழந்தைகளுக்கு கூட முதல் உணவாக ராகி கஞ்சியை அறிமுகப்படுத்தச் சொல்கிறார்கள். இந்த குளிர்காலத்தில் ராகி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் ராகிக்கு உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் பண்புள்ளது.
ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ராகி (கேழ்வரகு) தோசையைத் தேர்வு செய்யலாம். இது எலும்புகளை வலுப்படுத்தவும், நாள் முழுவதும் உடல் சோர்வடையாமல் இருப்பதற்கும் உதவியாக உள்ளது. எளிமையான முறையில் ஆரோக்கியமான ராகி தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகி தோசைக்கு ரெடி செய்ய 10 நிமிடங்களும், சமைப்பதற்கு 4 நிமிடங்களுமே எடுத்துக்கொள்கிறது.
ராகி தோசை செய்யத் தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 1 கப்
- ரவை – 1/2 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 5 கப்
- நெய்/எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, அரிசி மாவு, உப்பு, மிளகு மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாத வகையில் மாவை கலக்க வேண்டும். மாவை சிறிது நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். மறுபுறம் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.
சூடான பிறகு தோசைக்கல்லில் மாவை ஊற்றவும். தோசையை மிதமான தீயில் வைத்து, விரும்பியபடி சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சமைக்க வேண்டும். தோசை மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை வைத்திருந்து பிறகு எடுக்கவும். ராகி தோசை சூடாக உள்ளபோதே தேங்காய் சட்னி உள்பட அனைத்து விதமான சட்னிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ராகி தோசையால் ஏற்படும் நன்மைகள்
ராகியில் கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும், உடல் எடையைக் குறைக்க உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தும், இரத்த சோகையைத் தடுக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆற்றலை அளிக்கும், ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இருக்கும்.
