ஹோட்டல் சுவையில் காரசாரமான நண்டு கிரேவியை (Crab Gravy) வீட்டிலேயே எப்படி சமைப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
அசைவப் பிரியர்கள் பெரும்பாலானோருக்கு பிடித்தமான உணவுகள் பட்டியலில் நண்டும் உள்ளது. கடல் நண்டுகள், வயல்களில் பிடித்து சமைக்கும் நண்டுகளும் அதிக சுவையுடையதாகவே இருக்கும். ஆகவே, சிக்கன், மட்டன், மீனைப் போலவே நண்டும் பெரிதாக பலராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. குறிப்பாக சளி, இருமல் தொந்தரவால் அவதிப்படுபவர்கள் நண்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் சளி, இருமல் பறந்துபோய்விடும். குறிப்பாக நண்டு குழம்பு (crab gravy) என்பது காரசாரமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். ஹோட்டல் சுவையில் வீட்டில் நண்டு கிரேவி எளிதாக எப்படி செய்வது? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து பார்க்கலாம்.
நண்டு கிரேவி வைக்கத் தேவையான பொருட்கள்
- நண்டு – 10 முதல் 15
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 1
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லித் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- எண்ணெய் (தேவையான அளவு)
- உப்பு (தேவையான அளவு)
நண்டு கிரேவி செய்வது எப்படி?
முதலில் நண்டுகளை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் ஓடுகளை இரண்டாகவோ பிரித்து கால்களையும் தனியாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் தூள் (Turmeric powder), மிளகாய்த் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக வைத்துவிட வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். அதனுடன் துருவிய தேங்காய், மிளகு மற்றும் சோம்பு விதைகளைச் சேர்த்து நன்றாக விழுதாக்க வேண்டும்.
சுவையான நண்டு கிரேவி ரெடி!
இதனையடுத்து வாணலியில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற சூடாக்க வேண்டும். சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி அதில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் (Ginger garlic paste) வாசம் போக வதக்க வேண்டும. பிறகு சுவைக்கு ஏற்ப உப்பு, மல்லித் தூள், மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் நாம் ஏற்கனவே மசாலா தடவி வைத்துள்ள நண்டுகளை அதில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதி வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லி இலைகளை தூவினால் நமக்கு சுவையான நண்டு கிரேவி ரெடி.
