இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. வயதானவர்களுக்கு மட்டுமே இருந்த நீரிழிவு நோய் தற்போது 30 வயது இளைஞர்களுக்குக் கூட கண்டுபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், தற்போது பலருக்கு ரத்த பரிசோதனை செய்யும்போது ப்ரீ டயபடிக் எனப்படும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவுக்கு முந்தயை ப்ரீ டயபடிக் நிலையுடன் போராடி வருகிறார்கள். ப்ரீ டயபடிக் நிலையில் ரத்தத்தின் சர்க்கரை அளவு சராசரியை விட அதிகமாக இருக்கும். அதே சமயம் டைப் 2 வகை நீரிழிவு நோய் அளவுக்கு அதிகமாக இருக்காது. ப்ரீ டயபடிக் உள்ளவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். உணவு, உடல் இயக்க செயல்பாடு, மன அழுத்தத்தை குறைப்பது, முறையான உறக்கம் ஆகியவற்றின் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸை சரியான அளவில் நிர்வகிக்கலாம். நீரிழிவு நோய்க்கு முந்தைய ப்ரீ டயபடிக் நிலையை திறம்பட நிர்வகிக்க 4 வழிமுறைகளைக் காணலாம்.
மன அழுத்தம் குறைப்பு, சரியான உறக்கம்
மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மோசமான உறக்கம் ஆகியவை ரத்தத்தின் குளுக்கோஸின் நிலைத்தன்மையை பாதிக்கிறது. அதாவது கார்டிசோல் (Cortisol) எனப்படும் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் ஹார்மோன் நேரடியாக சர்க்கரை நிர்வகிப்பை பாதிக்கிறது. மன அழுத்தமாக இருக்கும்போது, மோசமான உறக்க சமயங்களிலும் கார்டிசோல் அளவு உயர்ந்து, இன்சுலின் குளுக்கோஸை செல்களுக்கு கொண்டு செல்லும் பணியில் தலையிடுகிறது. இதனால் ரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. சீரான தூக்கம் கார்டிசோல் உயராமல் நிலைப்படுத்தி குளுக்கோஸ் மாறுபாட்டைக் குறைக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கும்போது இன்சுலின் சுரப்பும் சரியாக இருக்கிறது. இதேபோல மாலை நேர வழக்கம் எனப்படும் அடுத்த நாளுக்கு தயாராவது, ஓய்வு எடுப்பது, தியானம், வாசித்தல் உள்ளிட்டவையும் ரத்தத்தின் ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும்.
தினசரி உடற்பயிற்சி
நாள்தோறும் உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுவது குளுக்கோஸின் அளவை சரியாக நிர்வகிக்கும் வழிகளில் ஒன்றாகும். நடை பயிற்சி, ஓட்டப் பயிற்சி, கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் சுருங்கும். இதன்மூலம் ரத்தத்தின் இருந்து குளுக்கோஸ் அளவு உறிஞ்சப்பட்டு இன்சுலின் தேவை எளிமையாக மாறும். உடல் இயக்கம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, தசைகளின் வலிமையையும் அதிகரிக்கிறது. ப்ரீ டயபடிக் உள்ளவர்கள் விறுவிறுப்பான நடை பயிற்சி, வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயராமல் நிர்வகிக்கலாம்.
நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்தல்
ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் ரத்தத்தின் உள்ள குளுக்கோஸின் அளவு வேறுபடும். நார்ச்சத்துள்ள உணவுகள் மெதுவாக செரிமானமாகி ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை லேசான வேகத்தில் வெளியிடுகின்றன. நார்ச்சத்துள்ள உணவுகளை உடலுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு, குடல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. ஓட்ஸ், பீன்ஸ், காய்கறிகள், தானியங்கள், ஆப்பிள்கள் மற்றும் பெர்ரி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். இவை உடல் எடையை சரியாக நிர்வகிக்க உதவுகிறது.
சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள், இரவு நேர உணவை தவிர்ப்பது
தூங்கும் நேரத்திற்கு சற்று முன்னதாக இரவு உணவு சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கிறது மற்றும் குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. முன்கூட்டியே உணவை சாப்பிடும்போது உடலுக்கு ஊட்டசத்துக்களை கொண்டு சேர்க்கவும், உணவுக்கு பிந்தையை குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும் உதவும். தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடிப்பது இன்சுலின் சுரப்பை சிறப்பாக நிர்வகிக்கிறது, காலை நேரத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
சரியான உணவு, நிம்மதியான தூக்கம், நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் ப்ரீ டயபட்டிக் இருப்பவர்கள் அதனை தள்ளிப்போட அல்லது வராமல் தடுக்கலாம்.
