டிட்வா புயல் வலுவிழந்துள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நாளை (டிசம்பர் 2) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. அதேசமயம் சென்னைக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று காலை தொடங்கி பரவலாக கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று கனமழை காரணமாக பிற்பகலில் சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறே வீடு திரும்பினர்.
இந்நிலையில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
