எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குறுகிய காலத்தில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, சிபிஐ – சிபிஎம், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. 

ADVERTISEMENT

இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுராந்தகம் வேட்பாளராக மரகதம் குமரவேல், தாராபுரம் வேட்பாளராக சத்தியபாமா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். 

ADVERTISEMENT

 இவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் வாய்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், ”தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

மேலும், ”பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளதால் இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். 

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் சொந்த காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ”மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இதுபோன்று குறுகிய காலத்தில் மீண்டும் தேர்தல் நடத்துவது கேலிக்கூத்தானது. வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயலும் ஆகும். குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர். 

தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் , இதுபோன்ற வழக்குகள் ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க பரிந்துரை செய்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share