சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு : 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், ‘விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து சாட்சிகளின் வாக்குமூல நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அந்த உத்தரவு விவரம் இன்று (ஜூலை 4) வெளியாகியுள்ளது.

அதாவது, குட்கா வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்கனவே மனுதாரருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மனுதாரரின் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில்  எந்த தவறும் இல்லை என்று கூறி முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். 

மேலும் குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share