சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. Government buses allowed at toll booth
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டிய தொகை 276 கோடி ரூபாயை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக மதுரை கப்பலூர், சாத்தூர், எட்டுர்வட்டம், கயத்தாறு, சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, கப்பலூர் எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக இன்று (ஜூலை 10) முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை ஜூலை 10ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், “நிலுவைத் தொகை குறித்து சுங்கச்சாவடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து கப்பலூர், நாங்குநேரி, எட்டூர்வட்டம், சாலைப்புதூர் ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வரும் 31ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் வழக்கம்போல் தென்மாவட்ட சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. Government buses allowed at toll booth
