பல்வேறு போராட்டங்கள்: மூன்று அடி இளைஞர் டாக்டரானது எப்படி?

Published On:

| By Selvam

பல்வேறு போராட்டங்களை வென்று, குஜராத்தில் மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் அரசு டாக்டராகி இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவிகித உயர குறைபாடுடன் பிறந்தவர். மூன்று அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷுக்கு டாக்டராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது.

ADVERTISEMENT

ஆனால், அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர் டாக்டராக முடியாது, அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018-ம் ஆண்டு கணேஷுக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை மறுக்கப்பட்டது.

ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்டப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது.

இதையடுத்து, 2019-ல் கல்லூரியில் சேர்ந்த அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார். தற்போது பாவ் நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

டாக்டர் கனவு நிறைவேறியது குறித்து பேசியுள்ள கணேஷ்,

“ப்ளஸ் 2 முடித்தவுடன், நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றேன். இவை அனைத்தையும் முடித்து மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

இந்த உயரத்தில் இருப்பதால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை எளிதாக அணுக முடியாது, சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள்.

அதன் பிறகு என்ன செய்யலாம் என பள்ளி முதல்வரிடம் பேசி முடிவெடுத்தேன். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி  வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன்.

டாக்டராக ஆகப்போகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னபோது, அவர்களே சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். ஆனால், போகப்போக புரிந்துகொண்டனர்.

இப்போதும் முதன்முதலில் என்னை பார்க்கும் நோயாளிகள் சற்று வியப்புடன் பார்த்தாலும், பின்னர் புரிந்துகொள்கிறார்கள்.

அவர்களது ஆரம்பகட்ட அணுகுமுறையை நானும் ஏற்கிறேன். தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், போகப்போக அவர்கள் மகிழ்ச்சியாக வந்து செல்கிறார்கள்” என்று  விடாமுயற்சியால் தான் அடைந்துள்ள விஸ்வரூப வெற்றியைப் பற்றி பேசியுள்ளார்.

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை சின்ன நாற்காலி மேல் ஏறி நின்று சிகிச்சை அளிக்கும் டாக்டர் கணேஷை பொதுமக்கள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்து வியக்கின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு

மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி : விஜய் புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share