யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள யானைகள் அருகே ஓடும் காவிரி ஆற்றில் பாகன்களுடன் சென்று குளித்துக் கொண்டிருந்தன.
இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இரு யானைகளுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கஞ்சன் என்ற யானை மார்த்தாண்டா என்ற யானை மீது பாய்ந்து தும்பிக்கைகளால் தாக்கியது.
இதனால் நிலை தடுமாறிய மார்த்தாண்டா கீழே விழுந்த போது அதன் அருகில் நின்று கொண்டிருந்த ஜிம்னு என்ற பெண் சிக்கிக்கொண்டார். யானையின் அடியில் சிக்கியதால் அவரை மீட்க முடியவில்லை.
இதனால் படுகாயம் அடைந்த ஜிம்னு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவரது கணவர் கை குழந்தையுடன் மனைவியை யானைகளிடமிருந்து காப்பாற்ற போராடியது காண்போரை கண்கலங்க செய்தது.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜிம்னு, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர். குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது இவ்வாறு நேர்ந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்தரே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
