சப்பாத்தி, பரோட்டா, பூரி என எதுவாக இருந்தாலும் அதற்கு வெஜ் குருமா நல்ல கூட்டணி. ஹோட்டல்களில் கிடைக்கும் கெட்டியான பதமும், மணமும் வீட்டில் கிடைக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை சரியாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக தேங்காய், முந்திரி, கசகசா சேர்த்து அரைக்கும் விழுதுதான் குருமாவின் சுவைக்கு முக்கிய காரணம்.
குருமாவுக்கு தேவையான பொருட்கள்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்ட காய்கறிகள் இரண்டு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு வெங்காயம், இரண்டு தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவை தேவை.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றுடன் எண்ணெய், நெய், உப்பு, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
அந்த கெட்டியான பதத்துக்கு இதுதான் ரகசியம்
அரை கப் தேங்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, எட்டு முந்திரி மற்றும் இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
முந்திரி, கசகசா இரண்டும் சேர்வதால் குருமாவுக்கு நல்ல கெட்டித்தன்மை கிடைக்கும். காய்கறிகளை தனியாக சிறிது உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மசாலாவை வதக்குவதில் கவனம்
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி வாசனைப் பொருட்களை தாளித்த பிறகு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் தக்காளி, மசாலா தூள்களைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்குங்கள். இதுதான் குருமாவின் சுவையை தட்டி தூக்கும் முக்கியமான கட்டம்.
இறுதியில் செய்ய வேண்டியது
வேகவைத்த காய்கறிகளை தண்ணீருடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
குருமா லேசாக நுரைத்து, ஓரங்களில் எண்ணெய் பிரியத் தொடங்கியதும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடலாம். சூடான சப்பாத்தியுடன் பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
