தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி கவனம் செலுத்தும் வகையில், ET Business Growth Summit – Chennai Edition சென்னையில் நாளை செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. “Built in Tamil Nadu, ready for the world” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சி முக்கிய விவாதமாக இடம்பெறுகிறது.
உலக சந்தையை நோக்கும் தமிழக நிறுவனங்கள்
தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை, தொழில் குழுமங்கள், தொழில்நுட்பச் சூழல் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களின் பரவலான அடித்தளம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. உள்நாட்டு சந்தையைத் தாண்டி வெளிநாடுகளில் விரிவடைய விரும்பும் நிறுவனங்களுக்கு முதலீடு, போட்டித்திறன், புதுமை மற்றும் தொழில் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
MSME வளர்ச்சிக்கு நிதி முக்கியமா?
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) நிர்வாக இயக்குநர் வாகே சங்கத் பல்வந்த், IAS, சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து IDBI Bank நிர்வாக இயக்குநர் டாக்டர் குமார் நீல் லோஹித் பங்கேற்கும் கலந்துரையாடலில், MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி ஆதாரம், போட்டித்திறன் மற்றும் நம்பிக்கை ஆகியவை குறித்து பேசப்பட உள்ளது.
உலகளாவிய MSME நிறுவனங்களை உருவாக்க முடியுமா?
“Can Chennai build the next generation of global MSME champions?” என்ற தலைப்பில் நடைபெறும் குழு விவாதத்தில் Volt Energy நிறுவனர் மற்றும் CEO ரிஷப் தேவ் பஜாஜ், Indo-UAE Economic Chamber of Commerce நிறுவனர் ஸ்ரீதேவி அருணாசலம், Sweet Karam Coffee இணை நிறுவனர் ஆனந்த் பரத்வாஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறுகிறது. இறுதியாக Rane (Madras) Ltd நிர்வாக இயக்குநர் ஆதித்ய கணேஷ், எல்லைகளைத் தாண்டி நிறுவன வளர்ச்சியை உருவாக்குவதற்கான அனுபவங்களைப் பகிர உள்ளார்.
