இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனின் கோவை வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று (ஜூலை 30) சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடந்தப்பட்டன. கொழும்பு மட்டக்களப்பு, நீர் கொழும்பு ஆகிய பகுதிகள் குறிவைக்கப்பட்ட இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 269 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாகக் கருதப்படும் ஜஹ்ரான் ஹாஷிமுடன் சமூக வலைதள தொடர்பில் இருந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பியதாகவும் தேசிய புலனாய்வு முகமை அசாருதீனை கைது செய்து கேரளா சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் NIA குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர் மூன்றாவது வீதியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
