புதிய குடியரசுத் தலைவர் ஆகிறார் திரௌபதி முர்மு

Published On:

| By Prakash

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இன்று (ஜூலை 21) நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அவர் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்னும் மிக உயரிய பதவியில் அமர்வதை ஒட்டி அவருக்கு உலகம் முழுதுவதிலும் இருந்தும் வாழ்த்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த யஷ்வந்த் சின்காவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 21) நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் முதல்சுற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் முர்முவுக்கு 540 வாக்குகள் கிடைத்தன. சின்காவுக்கு 208 வாக்குகளும் கிடைத்தன. 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இரண்டாம் சுற்று முடிவில், 1349 வாக்குகளும் சின்காவுக்கு 537 வாக்குகளும் கிடைத்தன. அதாவது, 4 லட்சத்து 83 ஆயிரத்து 299 மதிப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். சின்காவுக்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 876 மதிப்பு வாக்குகளும் கிடைத்தன.

மூன்றாவது சுற்றின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகித வாக்குகளைக் கடந்தார். இதனால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்காவும் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share