தவெக வேட்பாளர் காரை தாக்கி தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளர் பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பானுமதி போட்டியிடுகிறார். கடந்த 16-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுகவினர் தடுத்து நிறுத்தித் தாக்கி சேதப்படுத்தியதாகவும், தரக்குறைவான ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வேட்பாளரை அவதூறாகப் பேசியதாகவும், அதிமுக – தவெக தொண்டர்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் தாராபுரம் தமிழக வெற்றிக் கழக 18-வது வார்டு பொருளாளர் காயத்ரி தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தாராபுரம் காவல்துறையினர் அதிமுக வேட்பாளர் பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், செந்தில்குமார், ராஜேந்திரன், தீபா, கோமதி, ராணி, முத்துமணி ஆகிய ஒன்பது பேர் மீது பெண்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தனிநபர் சொத்துக்களைச் சேதப்படுத்துதல், கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
