விஜய்யை அவமதித்த காங்கிரஸ்.. வாதாடிய முரசொலி மாறன் மகன்.. தயாநிதியின் ஃப்ளாஷ்பேக்

Published On:

| By Mathi

Dayanidhi Maran reveals flashback on Vijay and Congress

தமிழக சட்டசபையில் மறைந்த திராவிடர் இயக்க மூத்த தலைவர் முரசொலி மாறன் குறித்து முதல்வர் விஜய் குற்றம்சாட்டி பேசியதற்கு அவரது மகனும் மத்திய சென்னை திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) முதல்வர் விஜய் பேசுகையில், சர்க்காரியா கமிஷனில் பதிவான குற்றச்சாட்டுகளை விவரித்தார். அதில் மறைந்த முதல்வர் கலைஞர், திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் பற்றிய கருத்துகளும் இடம் பெற்றிருந்தன.

ADVERTISEMENT

இதற்கு கண்டனம் தெரிவித்து தயாநிதி மாறன் வெளியிட்ட எக்ஸ் பதிவு: ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?

அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?

ADVERTISEMENT

உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் பற்றிப் பேசலாமா?

இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?

அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா?

முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா?

போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது… இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!

தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share