ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டம் மசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் இருமல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை. இந்த சூழலில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக கடப்பா மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி ரவி பாபு கூறுகையில், ‘உயிரிழந்த நபர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடுமையான மூச்சு திணறல் மற்றும் இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சல் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
அதிக வீரியம் கொண்ட ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் நோய் பாதிப்பு குறையவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் ஒருவேளை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று கருதினர்.
அதைத்தொடர்ந்து அவருக்கு நெஞ்சு பகுதியில் சிடி ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்த நபரின் இருப்பிட பகுதியை சுத்தப்படுத்துதல் அவருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.
பி சி ஆர் பரிசோதனை கருவிகள், முக கவசங்கள், கிருமி நாசினிகள் ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
