கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதி குளியலறையில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்ணிகா (19). இவர் கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலை கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த தர்ணிகா, நேற்று காலை குளிப்பதற்காக விடுதி குளியலறைக்குச் சென்றுள்ளார். அவர் குளித்துவிட்டு நேரடியாக வகுப்பறைக்கு வந்துவிடுவார் என்று எண்ணி சக மாணவிகள் வகுப்பிற்கு சென்றுவிட்டனர்.
ஆனால், மதிய இடைவேளை வரை தர்ணிகா வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் பிற்பகலில் விடுதிக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது குளியலறை கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துப் பார்த்தபோது தர்ணிகா உள்ளே பக்கெட்டில் தலை கவிழ்ந்த நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தர்ணிகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் விக்கிரவாண்டில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெற்றோரும் உறவினர்களும் தர்ணிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், தர்ணிகாவிற்கு உடல்நிலையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறுவது முற்றிலும் பொய் என்றும் மறுத்துள்ளனர். காலையில் குளிக்கச் சென்ற மகள் மதியம் 1:30 மணி வரை வராத நிலையில் விடுதி நிர்வாகம் ஏன் கவனிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனைக் கூடத்தில் உடலைப் பார்த்தபோது உதடு வீங்கியும், கன்னத்தில் கருப்பு வடுக்கள் இருந்ததாகவும், விடுதியில் ஏதோ தவறு நடந்துள்ளதை மறைக்க முயல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
