கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் ஞாயிறன்று ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். இதில் காயம் அடைந்த மூவரும் கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூனன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக காவல் ஆய்வாளர் லதா என்பரை கூடுதல் விசாரணை அதிகாரியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் நியமித்தார்.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், சூலூர் கந்தசாமி , சிங்காநல்லூர் ஜெயராமன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது அனுமதி இன்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே விவகாரத்தில் தவெக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
