தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. லண்டனில் உள்ள முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பதும், பல்வேறு புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதுமே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.
பொதுவாக இதுபோன்ற அரசுமுறைப் பயணங்களின் போது முதலமைச்சர்கள் தனி விமானங்களைப் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இம்முறை பொதுமக்கள் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானத்திலேயே லண்டன் செல்ல முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக நாளை இரவு 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் (EK 547) பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் செல்ல உள்ளார். இந்த விமானம் மூலம் துபாய் சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து லண்டன் செல்லும் அதிநவீன ‘டபுள் டக்கர்’ முதல் வகுப்பு விமானத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
அதேவேளையில், முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன்-தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற அரசு உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் இந்த அரசுமுறை லண்டன் பயணத்தின் மூலம், தமிழக இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிற்துறை வளர்ச்சியும் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு தோராயமாக சுமார் ஒரு கோடி வரை செலவு ஆகும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
