அப்பாவின் வெற்றி எங்கள் குடும்பத்திற்கு புதிய பொறுப்பை கொடுத்துள்ளது என்று முதல்வர் விஜய்யின் மகன் சஞ்சய் கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் பிஹைன் வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தந்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
முதல்வர் விஜய்யின் வெற்றி குறித்து பேசிய அவர், “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரட்சி. இந்த வெற்றி என்பது எனக்கும், என் தங்கைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் கூடுதல் பொறுப்பும், பரம்பரை அடையாளத்தை காப்பாற்றி முன்னோக்கி செல்ல வேண்டிய கடமையும் ஆகும்.
எனக்கான சொந்த அடையாளத்தையும் பெயரையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அப்பா விரும்பினார். அதையேதான் நானும் நினைத்திருந்தேன். எங்கள் இருவரின் எண்ணமும் ஒரே மாதிரியாக இருந்தது.
அதேசமயம் உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எப்போதும் என்னிடம் கேட்கலாம். அதற்கு முன்னதாக அந்த உதவிக்கான முயற்சியை நீயே முன்வந்து எடுக்க வேண்டும். நான் வந்து உதவி செய்யப் போவதில்லை என்றும் அறிவுறுத்தினார்.
எல்லாவற்றையும் நான் நேரில் கற்று அந்த அனுபவத்தின் மூலம் வளர வேண்டும் என்று ஊக்குவித்தார்.
இதற்காக எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது குடும்பம் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் கமெண்டுகள் குறித்து பேசிய சஞ்சய், ”சில நேரங்களில் நல்ல விஷயங்கள் பேசப்படும்.. சில சமயங்களில் எதிர்மறையான கருத்துக்களும் வரும். ஒவ்வொருவரும் தங்களுடைய நோக்கத்தில் கருத்து தெரிவிக்கிறார்கள். சிலர் நலம் விசாரிப்பார்கள். சிலர் எனது படம் பற்றியும் குடும்பத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பார்கள். அவர்கள் கிரியேட்டிவ் ஆக இன்புட் கொடுத்தார்கள் என்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் தெரிவித்துள்ளார் சஞ்சய்.
