ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாலும், திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததாலும் மேற்குறிப்பிட்ட ஏழு தொகுதிகளும் காலியாக உள்ளன.
இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விதிக்க தடைவிதித்தது.
இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் மனுக்கள் மீது முடிவு வரும் வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என்று தெரிவித்தது.
இந்த சூழலில் முதல்வர் விஜய் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
”திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து ஜூன் 17ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10ஆம் தேதியே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை. காலியான தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்க கோரி தாக்கல் செய்தவர் தொகுதி வாக்காளர் அல்ல. தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்பவரும் இல்லை.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்தில் அடிப்படை உரிமை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொகுதியில் லட்சக்கணக்கான மக்கள் எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
