செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ள நிலையில் நேரு உள்விளையாட்டரங்கம் களைகட்டியது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று (ஜூலை 28) சென்னை உள் விளையாட்டரங்கில் தொடங்கியது. இதையடுத்து, அரங்கம் முழுவதும் மின்னொளிகளால் மின்னின. பலத்த பாதுகாப்புகளும் போடப்பட்டிருந்தன. போட்டிக்கு அனைத்து நாட்டு வீரர்களையும் வரவேற்கும் விதமாக, தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் 8 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தப்பாட்டம், கரகாட்டம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரங்கிற்குள் வந்த வீரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமரவைக்கப்பட்டனர். அப்போது, அரங்கில் சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள வரலாறுகள் அடங்கிய காணொலிக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு, அரங்கில், ஓவியர் சர்வம் பட்டேல் விதவிதமான செஸ் சம்பந்தப்பட்ட மணல் ஓவியங்களை வரைந்து அசத்தினார். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது படங்களும் வரையப்பட்டன. பின்பு, அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடிகளுடன் வலம்வந்து மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். வீரர்களின் அறிமுகத்திற்குப் பிறகு தொடக்க விழாவில் தாய் மண்ணே வணக்கம் பாடல் இசைக்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், புகழ்பெற்ற தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களின் நடனங்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, கவிஞர் வைரமுத்து, ஐஷ்வர்யா ரஜின்காந்த் உள்ளிட்ட பிரபலங்களும், அரசியல் கட்சியினரும், எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் கலந்துகொண்டனர். விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரம்பரிய பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தார்.
ஜெ.பிரகாஷ்
