சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள வீட்டில் கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டபோது, விஷவாயு தாக்கித் தந்தை மற்றும் மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அய்யனார். இவர்கள் இருவரும் இன்று யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்த 45 அடி ஆழமுள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அய்யனார் கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதால் மூச்சுத்திணறி அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். மகன் நீண்ட நேரமாகியும் மேலே வராததால், அவரை தேடி அவரது தந்தை ரவி உடனடியாக கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால், அவரையும் விஷவாயு தாக்கியதால் அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களையும் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றைத் தூர்வாரச் சென்ற தந்தை, மகன் இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
