பெரியார் சிலை மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு லெனின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று எச் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுபோன்று திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் எச்.ராஜா மீது ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் காவல் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர்.
கனிமொழி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த இரு வழக்குகளும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இறுதியாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயவேல், கலவரத்தை தூண்டுதல் பிரிவு 153, பொது அமைதியை குலைப்பது பிரிவு 504-ன் படி எச் ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து எச். ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி லட்சுமி நாராயணன்,பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவரது கருத்து உள்ளது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி எச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
