நிர்மலா சீதாராமனுக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 1) தள்ளுபடி செய்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் சோம்நாத் பாரதி போட்டியிட்டார்.
அப்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று இருந்த சமயத்தில், ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘சோம்நாத் பாரதி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பழைய குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
ஆனால் தங்களுக்குள் இருந்த பிரச்சனை 2019 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்று லிபிகா மித்ரா கூறியிருந்தார்.
தாங்கள் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக நிர்மலா சீதாராமன் பழைய கசப்பான சம்பவங்களை கிளறுகிறார் என்று கூறி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பராஸ் தலால், இந்த வழக்கை தொடர போதிய ஆதாரங்களோ முகாந்திரமோ இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த விஷயத்தில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
