தனக்கென ஓய்வு நேரமே இல்லாத வாழ்க்கை முறையும் பிரச்சினையை தீவிரப்படுத்தும்.
வேலை, குடும்பப் பொறுப்பு என ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்யும். போதுமான நேரம் தூங்கிய பிறகும் களைப்பு நீங்காமல் இருப்பது, முன்பு பிடித்த விஷயங்களில் ஆர்வம் குறைவது போன்றவை சாதாரண சோர்வாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து ஏற்படும் மன அழுத்தத்தால் உருவாகும் பர்ன்அவுட் நிலையாகவும் இருக்கலாம்.
பர்ன்அவுட்டின் முக்கிய அறிகுறிகள் என்ன?
எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வு நீங்காமல் இருப்பது, வேலை அல்லது பிடித்த விஷயங்களில் ஈடுபாடு குறைவது, சிறிய விஷயங்களுக்குக்கூட கோபம் அல்லது எரிச்சல் ஏற்படுவது ஆகியவை கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.
இதனுடன் கவனச்சிதறல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு ஏற்படலாம்.
எதனால் இந்த நிலை ஏற்படுகிறது?
அதிகப்படியான பணிச்சுமை மட்டுமே பர்ன்அவுட்டுக்கு காரணம் அல்ல. எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற அழுத்தம், நீண்ட நேர வேலை, குடும்பப் பொறுப்புகள், பாராட்டு அல்லது அங்கீகாரம் கிடைக்காத ஏமாற்றம் ஆகியவையும் மனச்சோர்வை அதிகரிக்கலாம்.
தனக்கென ஓய்வு நேரமே இல்லாத வாழ்க்கை முறையும் பிரச்சினையை தீவிரப்படுத்தும்.
மனச் சோர்விலிருந்து எப்படி மீள்வது?
முதலில், தங்களுடைய எல்லைகளை புரிந்துகொண்டு தேவையில்லாத பொறுப்புகளுக்கு ‘இல்லை’ என்று சொல்லப் பழக வேண்டும். வேலை நேரம் முடிந்த பிறகு செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களிலிருந்து சிறிது நேரம் விலகி இருப்பதும் உதவும்.
பிடித்த பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குதல், போதுமான தூக்கம், உடற்பயிற்சி, யோகா அல்லது தியானம் போன்றவற்றை வழக்கத்தில் கொண்டு வரலாம். மனதில் இருக்கும் அழுத்தத்தை நம்பிக்கையான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வதும் மனதுக்கு ஆறுதலைத் தரும்.
தொடர்ச்சியான சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தால், சுயமாக சமாளிப்பதற்குப் பதிலாக தகுந்த மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
