நாடாளுமன்ற மக்களவையில் ‘பொதுத் தேர்வுகள் திருத்தச் சட்டம்’ மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி. மத்திய பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்தார்.
மக்களவையில் இன்று ஜூலை 28-ந் தேதி பிரியங்கா காந்தி பேசியதாவது: பதவி விலகிய தர்மேந்திர பிரதானுக்கு பாஜகவினர் நாடாளுமன்ற வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளித்தது வெட்கக் கேடானது.
மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், பதவி விலகிய அமைச்சரை ஒரு சூப்பர் ஸ்டார் போலவும், போரில் வென்று திரும்பியவர் போலவும் கொண்டாடுவது அகம்பாவத்தின் வெளிப்பாடுதானே..
நீட் மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதற்கும் தடியடி நடத்துவதற்கும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் உத்தரவிட்டது யார்?
இந்த தேசத்தின் இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகள் மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்த யார் அனுமதி அளித்தது?
Gen Z தலைமுறையினரை கவருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேமரா கோணங்களை மாற்றி மாற்றி ரீல்ஸ்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதால் ஒரு பிரயோஜனுமே இல்லை. மாற்ற வேண்டியது கேரமாவின் ஆங்கிள் அல்ல.. இதயத்தின் ஆங்கிளைத்தான்.
மோடி ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள்கள் கசிவு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஒரே ஒரு குற்றவாளிக்கு கூட தண்டனை தரப்படவில்லையே ஏன்?
கர்ப்பிணிப் பெண் (குஜராத் பில்கிஸ் பானு) மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்ற, ஆதரித்த ஒருவரை (பிரகலாத் ஜோஷி) பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் புதிய கல்வி அமைச்சராக நியமித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு, பொதுத் தேர்வுகளை சீரமைக்க நந்தன் நீலகணி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி இடம் பெற்றுள்ளார். அவர் மாடுகளின் சிறுநீரான – கோமியம் குறித்த வல்லுநர். அவரும் கூட இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த குழு எப்படி சீர்திருத்தங்களை செய்யும்? இவ்வாறு பிரியங்கா காந்தி விமர்சித்தார்.
ஆனால் பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜுஜூ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரியங்காவின் பேச்சு சபைக் குறிப்பில் இடம் பெறாது என்றார்.
