பெண் ஒருவர் பாஜக மேலிடத்திடம் கொடுத்த புகாரை தொடர்ந்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும் டெல்டா மாவட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார். கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக பெண் ஒருவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார்.
அதே சமயம் கருப்பு முருகானந்தம் மீதான புகாரில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமான புகாரை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.முருகானந்தம் அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.
