தானியங்கி பட்டா மாறுதல் தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூலை 3) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”வருவாய்த் துறையைப் பொறுத்தவரையில், நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும். விற்பனை செய்பவரின் பெயர். புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது.
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுரையின் பேரில், இது குறித்து 12.06.2026 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசாணை (நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (நி.அ-2) துறை, நாள் 04.02.2020 குறித்து விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, முந்தைய இணையவழி உட்பிரிவு அல்லாத தானியங்கி பட்டா மாறுதலில் உள்ள இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து திருத்திய அரசாணை (நிலை) எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 25.06.2026 இவ்வரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முந்தைய தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் உள்ள இடர்பாடுகள்
நிலத்தினை விற்பனை செய்யும் போது விற்பனையாளரின் மனைவி மற்றும் மகள் போன்ற குடும்ப மகன் உறுப்பினர்களும் கையொப்பமிடும் (Co-Sign) பட்சத்தில் இச்சேவையினை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.
நிலத்தினை விற்பனை செய்யும் நபர் பொது அதிகார பத்திர முகவர் (Power of Attorney) மூலம் பத்திரப்பதிவு செய்யும் போது நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயரானது பட்டாதாரரின் பெயருடன் பொருந்தாமல் இருப்பதனால் இச்சேவையினை பயன்படுத்த இயலவில்லை.
நிலத்தினை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் உள்ளதா என்பதனை கண்டறிந்து, புதியதாக வாங்கிய நிலத்தின் புல எண் அந்த பழைய பட்டாவில் சார்பதிவாளர் அவர்களால் சேர்க்கப்படும்.
தற்போது தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்
நிலத்தினை விற்பனை செய்யும் போது, நில உரிமையாளர் (பட்டாதாரர்) மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் /மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கையொப்பமிடும் (Co-Sign) நிகழ்வுகளிலும் இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
ஒரு பட்டாதாரர் நிலத்தினை பொது அதிகார (Power of Attorney) மூலமாக பத்திரப்பதிவு செய்யும் போது, நிலத்தினை விற்பனை செய்பவரின் பெயருக்கும். பட்டாதாரரின் பெயருக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும், செல்லத்தக்க பொது அதிகார முகவர் (valid Power of Attorney) என்பதன் அடிப்படையில் தற்போது இச்சேவையினை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
நிலத்தை வாங்கும் நபருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏதேனும் நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு தானாகவே கடைசி பட்டா எண்ணிற்கு அடுத்த பட்டா எண் ஒதுக்க வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காலவிரயம் குறையும்.
இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்.
இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
