சென்னையில் வரும் ஜூலை 4, 6ஆம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மண்டல கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் அறிவிப்பில், ” ஜூலை மாதத்தின் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர். ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை. அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம். திரு.வி.க.நகர்.அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரேம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
