தமிழ்நாட்டில் ஆளுநர்களை வைத்து மத்திய பாஜக அரசு இடையூறு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது: கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது.
பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
