கர்நாடக மாநிலம் தார்வாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு (Prakash Raj) எதிராக இந்துத்துவா அமைப்பினரும் பாஜக தொண்டர்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
தார்வாட்டில் கர்நாடக வித்யாவர்தக சங்க அரங்கில் நடைபெற்ற ‘மனுஷ்யத்வதேடெகே சமுதாய ஜாதா’ (மனித நேயத்தை நோக்கிய சமுதாயப் பயணம்) நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிரகாஷ் ராஜின் பதாகையை இந்துத்துவா அமைப்பினர் கிழித்து, அதில் கறுப்பு மை பூசி அவமதித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த பிரகாஷ் ராஜை முற்றுகையிட முயன்ற இந்துத்துவா அமைப்பினர், தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளும் பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாகத் தலையிட்ட காவல்துறையினர், தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்துத்துவா அமைப்பினரை வலுக்கட்டாயமாகத் தடுத்து கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் முற்போக்கு அமைப்பினரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிராக “ஆர்.எஸ்.எஸ் கோ பேக்” (RSS Go Back) முழக்கங்களை எழுப்பினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் நல்ல சமூக நிகழ்ச்சி இது; இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் நீதிபதிகள் பங்கேற்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சியை எதிர்ப்பவர்களுக்கு வேறு வேலை இல்லை” என்று பதிலளித்தார்.
