தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் (INTER-STATE COUNCIL ) செயல்பட்டு வருகிறது. மாநிலங்களிடை கவுன்சிலுக்கு (Zonal Councils) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக மத்திய- மாநிலங்களிடை கவுன்சில் அமைக்கப்பட்டது. மாநிலங்களிடையேயான கவுன்சிலானது, மாநிலங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த அமைக்கப்பட்டது.
இந்த மாநிலங்களிடையேயான கவுன்சிலானது தென் மாநிலங்களின் முதல்வர்கள், வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், கிழக்கு, மேற்கு மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
1957-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நடைபெற்ற தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு அதன் பின்னர் 1967-ல் கூட்டப்பட்டது. 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது.
2022-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் கடைசியாக 30-வது தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மாநாடு கூட்டப்படவில்லை.
இந்நிலையில் 3-1வது தென் மாநிலங்களின் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி நடைபெறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில்,
தமிழ்நாடு முதல்வர் விஜய்
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு
கேரளா முதல்வர் சதீஷன்
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் தென் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.
மாநிலங்களுக்கு இடையேயான உறவு, தொழில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் கருத்துகள் முன்வைக்கப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சனை, கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொலை சம்பவங்களால் தமிழகம்- கர்நாடகா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.
