திமுகவிடம் 108 எண்ணிக்கை இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பி உள்ளது. சற்று முன் சிபிஎம், சிபிஐ அலுவலகங்களுக்கு நேரில் சென்று தவெக இணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆதரவு கோரி உள்ளார்.
இதற்கிடையில் நேற்றும் இன்றும் ஆளுநரை நேரில் சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க விஜய் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதா என விசிக முதன்மை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பதிவில், “தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
