வேறு மாவட்டங்களில் நடக்கும் அதிமுக போராட்டத்தில் பங்கேற்க முடியாது – போர்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி

Published On:

| By Pandeeswari Gurusamy

SP Velumani

அதிமுக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றாலும் வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடியாது எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (ஆகஸ்ட் 13) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பில் கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதை கண்டித்தும், தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி விவசாயிகள் பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் சில விதிமுறைகள் விதித்துள்ளதை கண்டித்தும், அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

இருப்பினும், கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், வருவாய் மாவட்டங்களில் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்டம் எஸ்.பி.வேலுமணி, சேலம் மாவட்டம் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டம் கே.பி.அன்பழகன் என அவரவர் சொந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று தலைமை ஏற்று நடத்துவதை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

ஏற்கனவே, கருத்து வேறுபாடு காரணமாக கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கழக பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என கழக பொதுச் செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் அதன்படி மீண்டும் கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை, புதிய கழக பொறுப்புகளில் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் வெளியிட்ட அறிவிப்பை, நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே, வகித்து வந்த கழக பதவிகள் திரும்ப வழங்க வேண்டும், என எழுத்து மூலம் எங்கள் நிலைபாட்டினை தங்களுக்கு தெரிவித்தும், அதற்கு தாங்கள் எந்த பதிலும் இல்லாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றீர்கள்.

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில் தாங்கள் தற்போது, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இது போன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது.

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75,000/- வரையிலான வங்கி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75,000/-க்குமேல் கடன் பெற்ற விவசாயிகளின் வங்கி கடனில் 50% அதாவது ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்ய த.வெ.க அரசின் அறிவிப்பு, ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் பயிர்கடனை தள்ளுபடி செய்ய த.வெ.க அரசு முன் வரவேண்டும்.

ADVERTISEMENT

மேலும் கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை மற்றும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றிடவும், அது மட்டுமின்றி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் வழியில் அ.இ.அ.தி.மு.கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு வேறு எதுவுமில்லை. எனவே, அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம், வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share